ADDED : ஏப் 25, 2026 05:46 AM
புன்செய்புளியம்பட்டி, ஏபுன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர், கோவை கம்பெனிகளிலும், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களிலும் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
ஒரு சிலர் வெளியூரில் தொழில்கள் நடத்தி வருகின்றனர். இவர்களில் பலருக்கு சொந்த ஊரில் ஓட்டுக்கள் இருந்தன. இவர்கள் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க, நேற்று முன்தினம் ஆர்வமுடன் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்தனர். ஓட்டுப்பதிவு நாளன்று, ஓட்டளித்த இவர்கள் வேலை செய்யும் ஊர்களுக்கு இரவு திரும்பினர். இதனால் புன்செய்புளியம்பட்டியிலிருந்து கோவை, திருப்பூர் செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக திருப்பூர் செல்வதற்காக புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக திருப்பூர் செல்ல அரசு பஸ் வராததால் ஆத்திரமடைந்த பயணிகள், கோவை ரேக்கில் நின்றிருந்த அரசு பஸ்ஸை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற போக்கு
வரத்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கவே போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து கோவை செல்லும் அரசு பஸ் கிளம்பி சென்றது.
அதை தொடர்ந்து, 20 நிமிடங்கள் கழித்து சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பஸ் வந்தவுடன் அதில் ஏறி கிளம்பி சென்றனர். அரசு பஸ்ஸை சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
