ADDED : செப் 14, 2024 07:12 AM
ஈரோடு: ஈரோட்டில் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக பல ஆண்டுகளாக வசிக்கும், ராஜஸ்தான் உள்பட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்தோர், ஈரோட்டில் மணிக்கூண்டு அருகே வெங்கடாசலம் வீதியில், 27 ஆண்டுகளுக்கு முன், ராம்தேவ் பெருமாள் கோவிலை உருவாக்கினர். இங்கு ஆண்டுதோறும் ராம்தேவ் பெருமாள் தேர்த்திருவிழா நடக்கிறது. நடப்பாண்டு, 25வது தேர்த்திருவிழா கடந்த, 5ல் தொடங்கியது. நிறைவு நாளான நேற்று காலை கோவிலில் இருந்து ராம்தேவ் பெருமாள் உருவச்சிலை தேரில், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
நேதாஜி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, வெங்கடாச்சலம் வீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் பங்கேற்றனர்.
விநாயகர், ராமர், லட்சுமணன், முருகர், விஷ்ணு, லட்சுமி உள்பட பல்வேறு சுவாமிகளின் வேடமணிந்த பலரும், இளம்பெண்கள் நடனமாடியபடியும் சென்றனர். மாலையில் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. விழா ஏற்பாடுகளை ராம்தேவ் சேவா சங்க செயலாளர் லலித் ஹரிவாள் மற்றும் குழுவினர் செய்தனர்.
