ADDED : ஜூலை 01, 2026 04:33 AM
ஈரோடு: பருவநிலை மாற்றம், விற்பனை மந்தத்தால், சென்னிமலை பகுதியில், 100 கோடி ரூபாய் மதிப்பில், 'பெட்ஷீட்கள்' தேங்கி உள்ளன.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் வணிகர் சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:
சென்னிமலை பகுதியில் உற்பத்தியாகும் பெட்ஷீட், துண்டுகள் தேசிய அளவில் பிரபலமானவை. குளிர் காலம், பொங்கல் பண்டிகை காலங்களில், அதிக அளவில் படுக்கை விரிப்புகள் விற்பனையாகும். ஜனவரி மாதத்துக்கு பின், பெட்ஷீட் விற்பனை கணிசமாக குறைந்தது. சீதோஷ்ண நிலை மாற்றம், விற்பனை மந்தமானதாலும், 2 கோடிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பெட்ஷீட், கிடங்குகளில் தேங்கி உள்ளன. இவற்றின் மதிப்பு, 100 கோடி ரூபாய்க்கும் மேல் கணக்கிடப்படுகிறது.
ஏற்கனவே பருத்தி நுால் விலை, 5 முதல், 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இதனால் சிறு, நடுத்தர ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
பெட்ஷீட், துண்டு உள்ளிட்ட ஜவுளி தொழில் பாதிப்பதை அரசு கவனத்தில் கொண்டு, பொங்கல் பரிசுத்தொகுப்பில், சென்னிமலையில் தயாரிக்கப்படும் பெட்ஷீட், துண்டு போன்றவைகளை சேர்த்து, அரசு கொள்முதல் செய்து வழங்க வேண்டும். சென்னிமலை பகுதியில் கைத்தறி, பருத்தி படுக்கை விரிப்புகள் உற்பத்தியாகி, சந்தையில் தனித்துவ மாக உள்ளது.
இதன்மூலம், இப்பகுதியில் பல ஆயிரம் தொழிலாளர்கள், வேலை வாய்ப்பை பெறுகின்றனர். அருகேஉள்ள வெள்ளகோவில் உட்பட சில பகுதிகளில் பாலியஸ்டர், பருத்தி கழிவு நுாலை பயன்படுத்தி, குறைந்த செலவில் தரமான படுக்கை விரிப்பு தயாரித்து விற்பனைக்கு வருகிறது. அவற்றை அரசே கொள்முதல் செய்தால், உள்ளூர் ஜவுளி தொழிலுக்கு ஊக்கமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
