ADDED : ஏப் 07, 2024 03:48 AM
ஜவுளிக்கடை தொழிலாளி
வேன் மோதியதில் சாவு
புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலம், வடக்குப்பேட்டை பாரஸ்ட் டிப்போ வீதியை சேர்ந்தவர் விக்னேஷ், 29; புன்செய்புளியம்பட்டியில் ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்தார். பணி முடிந்து பஜாஜ் டிஸ்கவர் பைக்கில், நேற்று முன்தினம் இரவு புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில் சென்றார். சொலவனுார் மேடு பெட்ரோல் பங்க் அருகே எதிரே வந்த ஈச்சர் வாகனம் டூவீலர் மீது மோதியது.
இதில் துாக்கி வீசப்பட்ட விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். ஈச்சர் வாகன டிரைவரான திண்டுக்கல், புதுப்பட்டியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், 30, மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரயிலில் இருந்து தவறி
விழுந்த முதியவர் பலி
ஈரோடு: ஈரோடு, ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் எண்-2க்கு, மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு வந்தது. ரயில் படிக்கட்டில் பயணம் மேற்கொண்ட ஒவு முதியவர் தவறி பிளாட்பார்முக்கும், ரயிலுக்கும் உள்ள இடைவெளியில் விழுந்தார். இதில் அவரது உடலில் ஏறி இறங்கியது.
ரயில்வே போலீசார் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் இறந்து விட்டது தெரிந்தது. கர்நாடகா மாநிலம் மங்களூருரை சேர்ந்த சவுமியா காந்த், 70, என தெரிந்தது.
கோபியில் வாகன சோதனை
ரூ.2.89 லட்சம் பறிமுதல்
கோபி-
கோபி அருகே கொளப்பலுார் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர், நேற்று அதிகாலை 2:30 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கேரளாவை சேர்ந்த முகமது பாசில், 34, காரில் வந்தார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், 76 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அதே குழுவினர் அதே பகுதியில் கேரளாவை சேர்ந்த லாரி டிரைவர் முனீர் கானிடம், ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அத்தாணி சாலையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கோபியை சேர்ந்த அஜய், ஈச்சர் வேனை ஓ ஓட்டி வந்தார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், 1.13 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மூன்று இடங்களில் பறிமுதல் செய்த 2.89 லட்சம் ரூபாயை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பனிடம் ஒப்படைத்தனர்.
அந்தியூரில்...
அந்தியூர் அருகே மூலக்கடையில், தேர்தல் பறக்கும் படையினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலம் ஹனுாரை சேர்ந்த, பாலு, பிக்-அப் வாகனத்தில் வந்தார். அவரிடம், 1.16 லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

