UPDATED : மார் 06, 2026 04:39 AM
ADDED : மார் 06, 2026 04:18 AM

மின்சாரம் தாக்கி யானை பலிசத்தியமங்கலம்: கடம்பூர்மலை
காடகநல்லியில், அதே பகுதியை சேர்ந்த புட்டுசாமி என்பவரின் மக்காச் சோள
காட்டில், ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. அப்பகுதி மக்கள் தகவலின்படி
வனத்துறையினர் விசாரித்தனர். இதசில் புட்டுசாமி தனது ஒன்றரை ஏக்கர்
மக்காச்சோள தோட்டத்தில், விலங்குகள் புகுவதை தடுக்க, வேலியில் மின்சாரம்
பாய்ச்சியது தெரிய வந்தது. நேற்று அதிகாலை இரை தேடி வனப்பகுதியில் இருந்து
வந்த யானை, மின் வேலியில் சிக்கி பலியானது தெரிய வந்தது. இது தொடர்பாக
புட்டுசாமியிடம், வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வருவாய் துறையினர் மறியல்; 152 பேர் கைது
ஈரோடு: வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், ஈரோடு தாலுகா அலுவலகத்தில், காலவரையற்ற வேலை நிறுத்தத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
நேற்று, 10வது நாளாக தொடர்ந்தது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் விஜய், தமிழரசன், கவுரிசங்கர், பிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். பிறகு ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, திருமகன் ஈவெரா சாலையில் மறியலில் ஈடுபட்டதால், 152 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இரண்டு நாட்களாக மறியலில் ஈடுபட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் உள்ளிட்ட, 454 பேர் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரூ.9.68 லட்சத்துக்கு
வாழைத்தார் ஏலம்
கோபி: கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 60 ரூபாய், நேந்திரன், 12 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 880 ரூபாய், தேன்வாழை, 610, பூவன், 600, ரஸ்த்தாளி, 620, மொந்தன், 300, ரொபஸ்டா, 460, பச்சைநாடன், 410 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 4,980 வாழைத்தார்களும், 9.68 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
மாவட்ட விளையாட்டு
அலுவலர் மாற்றம்
ஈரோடு: ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலராக, கடந்த ஆறு ஆண்டாக சதீஷ்குமார் பணியாற்றினார். தற்போது நாகை மாவட்ட விளையாட்டு அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். சென்னையில் பணியாற்றிய ராஜகோபாலன், ஈரோடு மாவட்டத்துக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ஈரோடு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவிகள் விடுதி மேலாளர் ரோஸ் பாத்திமா மேரி, மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஈரோடு மாவட்ட மாணவிகள் பிரிவு தடகள பயிற்சியாளர் கண்மணி, சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.
சங்கமேஸ்வரர் கோவிலின்
அறங்காவலர் குழு தேர்வு
பவானி: பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலின், அறங்காவலர் குழு தலைவராக, கோவை சக்தி குழும தலைவர் மாணிக்கம் இருந்தார். அவர் பதவிக்காலம், 2010ல் முடிந்த பிறகு, 15 ஆண்டுகளாக, பண்ணாரி அம்மன் கோவில் அதிகாரி தக்காராக நியமிக்கப்பட்டார். தற்போது கோவிலில் திருப்பணி நடந்து வரும் நிலையில், அரசு பரிந்துரைப்படி, கோவை சக்தி குழும தலைவர் மாணிக்கம், மீண்டும் அறங்காவலலர் குழு தலைவராக நேற்று பதவியேற்றார். அவருடன் பிரபாத், மகேந்திரன், மாதப்பன், தமிழரசி, செல்லவேல் ஆகியோர் உறுப்பினர்களாக பொறுப்பேற்றனர்.

