ADDED : மார் 06, 2026 04:26 AM
சொக்கநாதபாளையம்
மாரியம்மன் பொங்கல் விழா
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையத்தில் பழமையான ஸ்ரீமகா சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பொங்கல் விழா நடக்கிறது. நடப்பாண்டு விழா கடந்த பிப்.,18 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி, 25ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம் வரும் நேற்று நடந்தது. சொக்கநாதபாளையம், ராமலிங்கபுரம், எல்லை கிராமம், திட்டம்பாளையம், மராபாளையம் உள்ளிட்ட கிராம மக்கள், பொங்கல் வைத்தும், ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பிறப்பு சான்றிதழில் பெயர்
சேர்க்க அவகாசம் நீட்டிப்பு
ஈரோடு: பிறப்பு, இறப்பு பதிவு சட்டப்படி பிறப்பு, இறப்பு பதிவு விதிகளின்படி கடந்த, 2009ம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில், பெயர் பதிவு செய்ய, 2024 டிச., 31ம் தேதியுடன் அவகாசம் முடிந்தது.
இந்நிலையில் பிறப்பு பதிவு செய்து, 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், சான்றிதழில் பெயர் பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கு, வரும் செப்., 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே கடைசி வாய்ப்பாகும். இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி கொள்ள, மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
வாகனம் மோதி சிற்பி பலி
மனைவி, குழந்தைகள் காயம்
காங்கேயம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் ராஜா, 39; பல்லடத்தில் குடும்பத்துடன் தங்கி, சிலைகள் செதுக்கி விற்பனை செய்து வந்தார். மனைவி ராஜலட்சுமி, 37; தம்பதிக்கு ஒன்பது வயதில் மகன், ஏழு வயதில் மகள் உள்ளனர். கும்பகோணத்துக்கு குடும்பத்துடன் சென்ற ராஜா, பிளஸ்சர் மொபட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளரில் பல்லடத்துக்கு வந்தார்.
காங்கேயம் அருகே வட்டாமொடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். அப்பகுதியினர் மீட்டு காங்கேயம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் சிற்பி ராஜா ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. மற்ற மூவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காங்கேயம் போலிசார் விசாரிக்கின்றனர்.
890 பயனாளிகளுக்கு
பட்டா வழங்கல்
கோபி: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கும் விழா கோபியில் நேற்றிரவு நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். கோபி தாலுகாவுக்கு உட்பட்ட, 890 பயனாளிகளுக்கு, வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி வீட்டு மனை பட்டா வழங்கி பேசினார்.
இதேபோல் நமக்கு நாமே திட்டத்தில், சிவசண்முகம் வீதியில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக்கூடம், மின் நகர் பகுதியில், புதிய சறுக்கு மைதானம் அமைக்கும் பணியை, அமைச்சர் பூஜை நடத்தி துவக்கி வைத்தார். நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், கோபி நகர செயலாளர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

