ADDED : மார் 24, 2026 05:42 AM
ஈரோடுதேர்தல் நடத்தை விதிமுறையால், பிற மாநில வியாபாரிகள் வருகையின்றி, ஈரோட்டில் சாலையோர சிறு ஜவுளி வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த, 15ம் தேதி வெளியானது. அப்போது முதல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. இதில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கத்துடன் செல்பவர்கள், உரிய ஆதாரங்களை தேர்தல் அலுவலர்களிடம் காண்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் பணம் பறிமுதல் செய்யப்படும். இதனால் தாங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக, ஈரோடு சாலையோர ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஈரோட்டில் ஜவுளி மார்க்கெட் திங்கள் இரவு நடக்கிறது. இதையொட்டியே எங்கள் வியாபாரம் இருக்கும். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து சிறுவியாபாரிகள் வருகின்றனர். தங்களுக்கு கிடைக்கும் தொகையை கொண்டு ஜவுளி சந்தைக்கு வருகின்றனர். 50 ஆயிரம் ரூபாய்க்கு ஜவுளி எடுத்து சென்று விற்கு முடியுமா?
குறைந்தபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை சிறு வியாபாரிகள், வியாபாரம் செய்ய எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த பிரச்னையால் பிற மாநில வியாபாரிகள், ஈரோடு மார்க்கெட்டுக்கு வருவதை தவிர்த்துள்ளதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது சிறு வியாபாரிகளை மட்டுமின்றி, தயாரிப்பாளர்களையும் பாதிக்கும் செயலாக உள்ளது.
ஒவ்வொரு முறையும் சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல், உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி இடைத்தேர்தல் வந்தாலும், இந்த விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. பணம் எடுத்து செல்வதில் தான் கெடுபிடி காட்டப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டியது.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
