ADDED : ஏப் 23, 2024 04:14 AM
வாய்க்காலில் தவறி
விழுந்த முதியவர் பலி
தாராபுரம்: தாராபுரம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகுடீஸ்வரன், 62; குண்டடம், முத்துக் கவுண்டன்பாளையத்தில் உள்ள நண்பர் பழனிசாமியை காண நேற்று முன்தினம் சென்றார். அவர் வீட்டில் இல்லாததால், அருகே செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்றார். எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதில், தண்ணீரில் மூழ்கி பலியானார். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிணற்றில் மிதந்த சடலம்தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த பகவான் கோயிலை சேர்ந்தவர் ஆனந்தன், 40, கூலி தொழிலாளி. திருமணம் ஆகாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த, 16ம் தேதி மாயமானார். இதனால் உறவினர்கள் தேடி வந்தனர். ஊருக்கு ஒதுக்குப்புறமான கிணற்றில் ஆனந்தனின் உடல் மிதந்தது. மூலனுார் போலீசார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரிக்கின்றனர்.
கர்நாடகா தேர்தல் எதிரொலிதாளவாடியில் டாஸ்மாக் 'லீவு'
ஈரோடு-
ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்ட எல்லையில், கர்நாடகா மாநிலம் அமைந்துள்ளது. அங்கு வரும், 26ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. எனவே தாளவாடியில் ராமாபுரத்தில் செயல்படும், டாஸ்மாக் கடை, அதனுடன் இணைந்த பார்கள் நாளை முதல், 26ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மது விற்பனையில் எவரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தரிசு நிலத்தில் தீ விபத்துநம்பியூர்: நம்பியூர் அருகே கோசணம் ஊராட்சி ஆலமேடு பகுதியில், பல ஏக்கரிலான மேய்ச்சல் தரிசு நிலம் உள்ளது. நேற்று மதியம் இப்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. வெயில் தாக்கம் மற்றும் காற்றால் தீ பரவி பற்றியது. பல ஏக்கரிலான காய்ந்த புல், செடி எரிந்து கருகியது. நம்பியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காங்கேயத்தில் விபத்து இழப்பீடுவழக்கில் 2 அரசு பஸ்கள் ஜப்தி
காங்கேயம்: காங்கேயம் அருகே மரவபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன், 46; ஆயில் மில் டிரைவர்.
கடந்த, 2017ல் டூவீலரில் ஈரோடு ரயில் நிலையம் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதற்காக மனோகரன் குடும்பத்தினர் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, காங்கேயம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதில் படுகாயமடைந்த மனோகரனுக்கு வட்டியுடன் சேர்த்து, ஒரு கோடியே, 17 லட்சம் ரூபாய் வழங்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால், நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.
இதற்கும் இழப்பீடு வழங்காத நிலையில், காங்கேயம் பஸ் ஸ்டாண்டில், இரண்டு அரசு பஸ்களை, நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

