ADDED : மே 19, 2024 03:10 AM
விபத்தில் சிக்கிய வாகனம்
நம்பியூர்: நம்பியூர் பகுதியை சார்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான கான்கிரீட் கலவை கலக்கும், ரெடி மிக்ஸ் இயந்திர லாரி, நம்பியூரிலிருந்து கலவை ஏற்றி கொண்டு நேற்று மாலை, 4:15 மணி அளவில் கோபி சென்றது. குருமந்துார் மேடு ரவுண்டானாவில் திரும்பிய போது நிலை தடுமாறி சாலை மைய தடுப்பில் மோதி கவிழ்ந்தது. லாரி ஓட்டுனர் படு காயம் அடைந்தார். அப்பகுதி மக்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிதனர் . இதுகுறித்து நம்பியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கபாலீஸ்வரர் கோவிலில்இன்று தேரோட்டம்
ஈரோடு: ஈரோடு மாநகர் கோட்டையில் வாருணாம்பிகை சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடப்பாண்டு, வைகாசி விசாக தேர் திருவிழா கடந்த, 10ல் துவங்கியது. விழா முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று காலை, 9:30 மணிக்கு கோவிலில் இருந்து துவங்குகிறது. மாநகரின் முக்கிய வீதிகள் வழியே தேரோட்டம் செல்கிறது. மாலையில் நிலை சேர்கிறது. வரும், 23ல் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கிறது. அப்போது மக்கள் இனிப்பு, பழம், பூக்கள் கொண்ட தாம்பாள தட்டுகளுடன் முன் செல்ல சுவாமி வீதியுலா நடக்கிறது.
வைகாசி விசாக விழாஇன்று தொடக்கம்
கோபி: கோபி, பச்சைமலை முருகன் கோவிலில், வைகாசி விசாக திருவிழா, லட்சார்ச்சனை, சத்ரு சம்ஹார ேஹாமம், இன்று காலை, 8:30 மணிக்கு துவங்குகிறது. தினமும் காலை, 9:00 முதல், 12:00 மணி வரை, லட்சார்ச்சனை, அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 22ம் தேதி காலை மூலவருக்கு 108 குடம் பாலாபிஷேகம் அபிஷேகம் நடக்கிறது. அதையடுத்து சத்ரு சம்ஹார மகா ேஹாமம், நடக்கிறது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசுவாமி கோவிலில், 22ல் நடக்கும் வைகாசி விசாக திருவிழாவில், காலை, 9:00 மணிக்கு, சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகன்யாச
அபிேஷகம், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
ரூ.1.66 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
ஈரோடு-
அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 14,660 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 27.90 ரூபாய் முதல், 31.70 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 5,824 கிலோ எடை கொண்ட தேங்காய், 1.66 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

