ADDED : ஏப் 17, 2024 11:53 AM
லோக்சபா தேர்தலுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஈரோட: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக, இன்று, நாளை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. இதன்படி ஈரோட்டில் இருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு தற்போது இயக்கப்படும் பஸ்களைவிட கூடுதலாக, 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, பொது மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
பழைய மொபட்டில் பறக்கும் பணம்
பவானிசாகர்: நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் தொகுதியில், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி, பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் அரசியல் கட்சியினர், மாற்று வழிகளை பயன்படுத்தி, பணத்தை எடுத்து செல்கின்றனர்.
இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர் கூறியதாவது: தேர்தல் செலவு, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆளுங்கட்சியினரின் பணப் பரிமாற்றத்தை பறக்கும் படை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. எதிர்க்கட்சிகளின் பணத்தை பறிமுதல் செய்வதில் மட்டுமே குறியாக உள்ளனர்.
கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் மட்டுமே சோதனையிடுகின்றனர். பவானிசாகர் தொகுதி வாக்காளர்களுக்கு அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வினர் பண பட்டுவாடா செய்து வருகின்றனர். தொழிலாளி போர்வையில் டவுன் பஸ்கள், பழைய மொபட் உள்ளிட்டவற்றில் பணம் எடுத்து செல்லப்படுகிறது. இவ்வாறு கூறினர்.
ஆந்திரா ஊர் காவல் படையினர் வருகை
ஈரோடு: லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, ஆந்திராவில் இருந்து போலீசார், ஊர் காவல் படையினர், 600 பேர் வந்துள்ளனர். மாநகரில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஆந்திராவில் இருந்து சட்டம் ஒழுங்கு போலீசார், 99 பேர் நேற்று காலை ஈரோடுக்கு வந்தனர். சத்தியமங்கலத்தில் இருந்து அதி விரைவு படையினரும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈரோடு வந்துள்ளனர். மலை கிராம பகுதிகளில் தேர்தல் புறக்கணிப்பு நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்தும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
தேர்தல் விதிமீறல் புகார் தி.மு.க.,வினர் மீது வழக்கு
ஈரோடு: ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட மாதவ கிருஷ்ணா வீதி, மீரா மொய்தீன் வீதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடுகளின் முன்புற கதவுகளில், தி.மு.க.வுக்கு ஓட்டளிக்க வலியுறுத்தி ஸ்டிக்கர்களை நேற்று முன் தினம் ஒட்டியுள்ளனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் புகாரின்படி, டவுன் போலீசார் அடையாளம் தெரியாத தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு
ஈரோடு: ஈரோடு லோக்சபா தேர்தலுக்காக, ஈரோடு எஸ்.கே.சி., நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாதிரி ஓட்டுச்சாவடி மையம், காந்திஜி ரோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து மகளிருக்கான ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

