ADDED : மார் 11, 2024 11:47 AM
கொங்கண சித்தர் கோவிலில் பஞ்ச கலச யாக பூஜை
காங்கேயம்: காங்கேயம் அருக ஊதியூரில், கொங்கணர் சித்தர்மலை கோவிலில், மஹா சிவராத்திரியை ஒட்டி சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பஞ்ச கலச யாக பூஜை நடந்தது. இதன் பின் சுவாமிக்கு அலங்கார பூஜை நடந்தது. தீபாராதனைக்கு பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஊதியூர், காங்கேயம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தீப்பிடித்து எரிந்த தீவனம் ஏற்றி வந்த வேன்
காங்கேயம்: கோவை அருகே பாப்பம்பட்டியில் இருந்து கோழித்தீவனம் ஏற்றிய வேன், ஒரத்தநாட்டுக்கு புறப்ட்டது. டிரைவர் கனகராஜ் ஓட்டினார். வெள்ளகோவில்-கரூர் சாலையில், ஒத்தக்கடை அருகே, நேற்று வேன் வந்தபோது, திடீரென புகை வந்தது. சுதாரித்த கனகராஜ், வேனை ரோட்டோரம் நிறுத்திவிட்டு, வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், வேனின் முன் பகுதி முற்றிலும் எரிந்து விட்டது.
பாசன நீர் திருட்டு புகார்விவசாயி மீது வழக்குகாங்கேயம், மார்ச் 11-வெள்ளகோவில், சேனாபதிபாளையம் கிராமம், மூத்தநாயக்கன் வலசில், பரம்பிகுளம்-ஆழியாறு பாசன வாய்க்காலை சேதப்படுத்தி, பாசன நீரை திருடியதாக, மூத்தநாயக்கன் வலசு பழனிச்சாமி மகன் மனோகரன் மீது, நீர்வளத்துறை உதவி பொறியாளர் பாஸ்கரன், வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் மனோகரன் மீது, விவசாயிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காங்கேயம் இன மாடுகள் ரூ.15 லட்சத்துக்கு விற்பனை
காங்கேயம்: காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 61 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல் 68 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 41 கால்நடைகள், 14 லட்சம் ரூபாய்க்கு விற்றன.

