ADDED : ஏப் 28, 2026 05:25 AM
திருப்பூர், கத்திரி வெயில் தொடங்கும் முன்பே திருப்பூரில் எலுமிச்சையின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. சித்திரை திருவிழாக்கள் மற்றும் கோடையின் தாகம் காரணமாக விற்பனை 'துாள்' பறப்பதால், கடந்த வாரம் கிலோ 200 ரூபாய்க்கு விற்ற எலுமிச்சை, நேற்று 260 ரூபாய் வரை எகிறியது. சந்தைக்கு வரத்து குறையவில்லை என்றாலும், ஜூஸ் கடைகள் மற்றும் கோவில்களின் தேவை அதிகரித்துள்ளதால் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுப்பதால், ஒரு பழம் 8 ரூபாய் வரை விற்கப்
படுகிறது.
விலை உயர்வால் சந்தைகளில் வியாபாரிகள் இப்போது பழத்தைத் தொடக் கூட அனுமதிப்பதில்லை; அப்படியே எடை போட்டுத் தருகின்றனர். முன்பு கழிவாகக் கருதப்பட்ட சிறு பழங்கள் கூட இப்போது நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. விலை உயர்வால் உணவகங்களில் 'லெமன் சாதம்' தயாரிக்க எலுமிச்சைக்குப் பதில் லெமன் பொடியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அதேபோல் ஜூஸ் கடைகளிலும் பெயரளவுக்கே எலுமிச்சையைப் பிழிந்து ஜூஸ் போடும் அவலம் நிலவுகிறது. வெயில் குறையும் வரை எலுமிச்சையின் 'கிராக்கி' குறைய வாய்ப்பில்லை என்கின்றனர் மார்க்கெட் வியாபாரிகள்.
