டாஸ்மாக் கடைகள் 2வது நாளாக மூடல்மேலாளர் பேச்சுவார்த்தை தோல்வி
டாஸ்மாக் கடைகள் 2வது நாளாக மூடல்மேலாளர் பேச்சுவார்த்தை தோல்வி
ADDED : மே 27, 2026 04:22 AM
ஈரோடு:டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மதுபாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக பெறப்படுகிறது. அந்த பாட்டிலில் ஸ்கேன் செய்யும் வகை ஸ்டிக்கர் ஒட்டி விற்பதால், அதே கடையில் காலி பாட்டிலை திரும்ப வழங்கி, 10 ரூபாய் பெறலாம்.
திரும்ப பெறப்படும் பாட்டிலில், 90 சதவீதம் அசுத்தமாக உள்ளதால், அவற்றை கையால் தொடக்கூட முடியவில்லை. பாட்டிலை பாதுகாக்க முடியவில்லை. தனி ஏஜென்சி மூலம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மாதமாக ஊழியர் கள் போராடி வருகின்றனர். டாஸ்மாக் நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில், நேற்று முன்தினம் முதல், ஈரோடு மாவட்டத்தில், 144 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இரண்டாவது நாளாக நேற்றும் கடைகள் பூட்டப்பட்டிருந்தன.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவில் கலெக்டர் கந்தசாமி தலைமையிலும், நேற்று காலை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரகுநாதன் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடந்தது. பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பாட்டிலை திரும்ப பெற மாட்டோம் என வலியுறுத்தினர். துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் போராட்டத்தை தொடர்வதாக கூறியதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
