ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்தி வைப்பு
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்தி வைப்பு
ADDED : பிப் 27, 2024 01:58 AM
ஈரோடு:ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில் சாலையோர வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.இதையடுத்து, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு, மணிக்கூண்டு, நேதாஜி சாலை, ஆர்கேவி சாலை, காவேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டன. மேலும், பல்வேறு பகுதிகளில், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார். இவ்விழாவிற்காக, ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக, மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகர், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு வந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.
