ADDED : அக் 03, 2025 01:29 AM
சென்னிமலை, நவராத்திரி விழாவை ஒட்டி, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் ஒன்பது
நாட்களாக, சிறப்பு வழிபாடு நடந்தது. தினம் ஒரு சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி, 10-வது நாளான நேற்று மாலை விஜயதசமியை ஒட்டி, அம்புசேவை நிகழ்ச்சி நடந்தது.
சூசுரனை வதம் செய்வதற்காக கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில் வந்தார். வள்ளி, தெய்வானை தனி சப்பரத்தில் வந்தனர். நான்கு ராஜவீதிகள் வழியாக வலம் வந்த சுவாமி, பிராட்டியம்மன் கோவில் வாசலை அடைந்து. அங்கு சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது.
அதை தொடர்ந்து வண்ணா சூரன் வதம் என்ற சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. இதில் வாழை மர உருவத்தில் இருந்த வண்ணாசூரனை, வில், அம்பினால் குத்தி வதம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வண்ணாசூரனை மூன்று முறை வலம் வந்து தம்பதி சமேதராக, கைலாசநாதர் கோவிலை அடைந்தார்.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.