/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'படிக்க படிக்க மனம் பக்குவப்படும்'
/
'படிக்க படிக்க மனம் பக்குவப்படும்'
ADDED : ஆக 12, 2025 02:11 AM
ஈரோடு, ஈரோடு புத்தகத்திருவிழாவின் நேற்றைய மாலை நேர சிந்தனை அரங்குக்கு, எம்.பி.என்.எம்.ஜெ., பொறியியல் கல்லுாரி தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார்.
'தென்றலிலே புறப்பட்ட தீப்பிழம்பு' என்ற தலைப்பில் பேச்சாளர் அரு.நாகப்பன் பேசியதாவது: இறைவன் அல்லது இயற்கை நமக்கு தந்த பெரும் வாய்ப்பு, நாம் மனிதராய் பிறந்தது. மனிதனுக்கான இலக்கணம் என்ன என்றால், மற்றவருக்கான மனிதத்தன்மையை உணர்ந்தவரே மனிதன் என உணர்த்தியவர் பாரதிதாசன். நாம், நமக்காக மட்டும் வாழவில்லை. தான் உண்டு என வாழ்பவன் பயனற்றவன். அடுத்தவருக்கும் சேர்ந்துதான் வாழ்கிறோம் என்ற எண்ணம் வேண்டும், என்கிறார் பாரதிதாசன்.
கல்லாதவன் என ஒருவர் இருந்தால், அல்லது வந்தால் அவருக்கு சொல்லிக் கொடுக்க தவறியவனை துாக்கிடு என்கிறார். அந்த நிலையை உருவாக்க நாம் மனிதனை கற்க வேண்டும். அதற்கு அதிகம் படிக்க வேண்டும். வாட்ஸ் ஆப்பும், கூகுளும் எல்லாவற்றையும் தந்துவிடும் என்கிறார்கள். அது, மனிதன் கற்பதை தந்து விடாது. படிக்க படிக்க நம் மனம் பக்குவப்படும். அந்த பக்குவம், பிற மனிதனை படிக்க சொல்லி கொடுக்கும். இவ்வாறு பேசினார். அடுத்து, 'நாடகம் வளர்த்த தேசியம்' என்ற தலைப்பில் முனைவர் கலைவாணன் பேசினார். ஐந்து பள்ளிகளுக்கு புத்தகங்களுடன் புத்தக அலமாரி வழங்கப்பட்டது.
இன்றுடன் நிறைவு
புத்தகத்திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. இன்றைய மாலை நேர சிந்தனை அரங்கில், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு நிறைவுரை ஆற்றுகிறார்.

