/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு மருத்துவமனையில் கு.க., செய்த பெண் சாவு
/
அரசு மருத்துவமனையில் கு.க., செய்த பெண் சாவு
ADDED : ஏப் 27, 2024 07:05 AM
புன்செய்புளியம்பட்டி : புன்செய்புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் இறந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகேயுள்ள கோடேபாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 30; இவரின் மனைவி துர்கா, 27; திருமணமாகி ஐந்தாண்டாகிறது. மூன்று வயதில் மகன் உள்ளார். மீண்டும் கர்ப்பமான துர்காவுக்கு கடந்த, 20ம் தேதி புன்செய்புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 24ம் தேதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடந்தது.
இதன் பிறகு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் இருந்த துர்கா நேற்று காலை இறந்தார். குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையில் நடந்த தவறே காரணம் என்று, கணவர் பன்னீர்செல்வம், பவானிசாகர் போலீசில் புகாரளித்துள்ளார்.

