ADDED : மார் 29, 2026 03:39 AM

ஈரோடு: பைனான்சியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கூலிப்படை நபர் உட்பட மூவர் கைதாகினர்.
ஈரோடு, சூரம்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார், 44; நிதி நிறுவனம் நடத்தினார். மார்ச் 22ம் தேதி மதியம், அவரது அலுவலகம் முன், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார், கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த அன்பரசு, 32, திருப்பூரை சேர்ந்த ஜெகதீஷ் குமார், 43, கூலிப்படையை சேர்ந்த திருநெல்வேலி முத்துமாணிக்கம், 26, ஆகிய மூவர், நேற்று முன்தினம் கைதாகினர். இதில், அன்பரசு மீது விருத்தாசலம் போலீசில் ஆயுத வழக்கு நிலுவையில் உள்ளது. ஜெகதீஷ் குமார் மீது காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஒன்பது வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முத்துமாணிக்கம் மீது வெங்கமேடு, திலகர் திடல் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மூவரும் நீதிமன்ற உத்தரவுப்படி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசார் கூறுகையில், 'சூதாட்ட விவகாரத்தில் பெருந்தொகையை உதயகுமார் தன்வசப்படுத்தியதால், கொலை நடந்துள்ளது' என்றனர்.
