ADDED : டிச 12, 2024 01:58 AM
பவானி, டிச. 12-
வெள்ளித்திருப்பூர் காளிப்பட்டியை சேர்ந்தவர் பிரேமலதா, 52; குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இரு நாட்களுக்கு முன், வெள்ளித்திருப்பூர் அடுத்த குரும்பபாளையம் மன்னாதீஸ்வரன் கோவில் வளைவில் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பிரேமலதா கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரித்து, அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரை சேர்ந்த கார்த்திகேயன், 38; குருவரெட்டியூர் செல்வகணபதி நகரை சேர்ந்த ஜெகதீஷ்குமார், 29; ஆகிய இருவரை நேற்று பூதப்பாடி டாஸ்மாக் கடை அருகில் வைத்து கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
