ADDED : ஏப் 30, 2026 05:33 AM
கோபி: கோபியில் மாயமான பெண்ணை, கொலை செய்த வழக்கில், இருவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் புஷ்பராணி, 43. இவர் கோபியில் உள்ள கார்மென்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சில ஆண்டுகளுக்கு முன் கணவர் வடிவேல் இறந்ததால், தனது 15, 17 வயதுள்ள இரு மகள்களுடன் வசித்து வந்தார். கடந்த, 25ம் தேதி வேலைக்கு சென்ற புஷ்பராணி, மீண்டும் வீடு திரும்பாததால், அவரது மொபைல்போனில் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. மகள்களின் புகார்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே தொப்பையாறு என்ற இடத்தில் கழுத்தை நெரித்த நிலையில், புஷ்பராணி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீசார், புஷ்பராணியின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டவர்களின் விபரங்களை துப்பறிந்ததில், கவுந்தப்பாடியை சேர்ந்த மகேந்திரன், 32, என்பவருடன் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது. பின்னர் மகேந்திரனை பிடித்து விசாரணை செய்ததில், புஷ்பராணி வேலை செய்த நிறுவனத்தில், அவரும் வேலை செய்திருப்பதும், இருவரும் பழகி வந்ததும் தெரியவந்தது.
புஷ்பராணி அடிக்கடி, மகேந்திரனை தனிமையில் இருக்க அழைத்தபோது, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து தங்களுக்குள் உள்ள தகாத உறவு குறித்து, அவரின் மனைவி நந்தினியிடம் கூறி விடுவதாக புஷ்பராணி மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேந்திரன், தனது நிலை குறித்து உறவினரான, சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே சிலுவம்பாளையத்தை சேர்ந்த சதீஷ், 36, என்பவரிடம் கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் சேர்ந்து புஷ்பராணியை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த, 25ம் தேதி, சேலம் மாவட்டம், காட்டூர் கருப்பராயன் கோவில் அருகே வனப்பகுதிக்கு காரில் அழைத்து சென்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில், மகேந்திரனும், சதீஷூம் சேர்ந்து கம்பியால் கழுத்தை நெரித்து புஷ்பராணியை கொலை செய்தது விசாரணையில்
தெரியவந்துள்ளது.பின்னர், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே தொப்பையாறு என்ற இடத்தில் புஷ்பராணி உடலை வீசி விட்டு வந்ததும் தெரிந்தது. புஷ்பராணியை கொலை தொடர்பாக இருவரிடமும், கோபி போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
