ADDED : மே 23, 2026 05:59 AM
கோபி:இந்து முன்னணியின் ஈரோடு மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில், கோபியில் நேற்றிரவு நடந்தது. இதில் பங்கேற்ற மாநில பொது செயலாளர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்ற உதயநிதி, சட்டசபையில் முதல் கூட்டத்திலேயே சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசியுள்ளார். இதனால் கட்சிகளை கடந்து, இந்து மக்கள் மத்தியில், கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மதத்தை அவர்களின் நன்மைக்கு அழிப்பேன் என்பதை, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தி.மு.க.,வுக்கு, 2026ம் ஆண்டுடன் சமாதி கட்ட வேண்டும் என உதயநிதி முடிவு செய்துவிட்டார் என மக்கள் கருதுகின்றனர். இனி தேர்தல் நடந்தால், எதிர்கட்சியாக கூட தி.மு.க., வராது.
ஒரு பிராமணரை அறநிலையத்துறைக்கு அமைச்சராக்கி உள்ளதாக வீரமணி பேசியுள்ளார். வீரமணி பேச்சு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். வீரமணிக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? கடவுளை கேவலப்படுத்த தினமும் பேசக்கூடிய ஒரு ஆள், அறநிலையத்துறை அமைச்சராக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து பேசுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
