ADDED : மே 01, 2026 05:30 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தின் எட்டு தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி மற்றும் கோபி கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர (இ.வி.எம்.,) பதிவுகளை எண்ணும் பணியில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் தலா, 17 மேற்பார்வைாளர்கள், 17 உதவியாளர்கள், 17 நுண் பார்வையாளர்கள் என, 408 பேர் ஈடுபடுகின்றனர். 14 மேஜைகளில் ஒரு சுற்று என, 8 தொகுதிகளில், 112 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் ஓட்டுகள் சட்டசபை தொகுதிக்கு தலா, 6 மேஜைகளில், எண்ணப்படும். இப்பணியில் 56 மேற்பார்வையாளர்கள், 112 உதவியாளர்கள், 56 நுண் பார்வையாளர்கள் ஈடுபடுகின்றனர்.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒரு மேஜையில் எண்ணப்படும். இதன்படி ஈரோடு கிழக்கில் (20 வேட்பாளர்கள்), 259 ஓட்டுச்சாவடி உள்ளதால், 18 முழு சுற்றும், 19ம் சுற்றில், 7 இயந்திரங்கள் எண்ணப்படும்.
ஈரோடு மேற்கில் (13 வேட்பாளர்கள்), 325 ஓட்டுச்சாவடி உள்ளதால், 23 முழு சுற்றும், 24ம் சுற்றில், 3 இயந்திரங்கள் எண்ணப்படும். மொடக்குறிச்சியில் (14 வேட்பாளர்கள்), 290 ஓட்டுச்சாவடிகள் உள்ளதால், 20 முழுச்சுற்றும், 21வது சுற்றில், 10 இயந்திரங்கள் எண்ணப்படும். பெருந்துறையில் (13 வேட்பாளர்கள்), 292 ஓட்டுச்சாவடிகள் உள்ளதால், 20 முழு சுற்றும், 21ல் 12 இயந்திரங்கள் எண்ணப்படும். பவானியில் (14 வேட்பாளர்கள்), 306 ஓட்டுச்சாவடிகள் உள்ளதால், 21 முழு சுற்றும், 22ல் 12 இயந்திரங்கள் எண்ணப்படும். அந்தியூரில் (14 வேட்பாளர்கள்), 271 ஓட்டுச்சாவடிகள் உள்ளதால், 19 முழுச்சுற்றும், 20ல் 5 இயந்திரங்கள் எண்ணப்படும். கோபியில் (18 வேட்பாளர்கள்), 309 ஓட்டுச்சாவடிகள் உள்ளதால், 22 முழுச்சுற்றும், 23ல் 1 இயந்திரம் எண்ணப்படும். பவானிசாகரில் (12 வேட்பாளர்கள்), 327 ஓட்டுச்சாவடிகள் உள்ளதால், 23 முழுச்சுற்றும், 24ல் 5 இயந்திரங்கள் எண்ணப்படும். மொத்தமாக, 174 சுற்றுகள் எண்ணி முடிக்கப்படும். தபால் ஓட்டுக்கள் ஒரு மேஜையில், 500 என, 6 மேஜையில் ஒரு சுற்றில், 3,000 ஓட்டுகள் எண்ணப்படும்.
