உரிய முன்னேற்பாட்டு பணிகளால் தவிர்க்கப்பட்ட வாக்காளர் சிரமம்
உரிய முன்னேற்பாட்டு பணிகளால் தவிர்க்கப்பட்ட வாக்காளர் சிரமம்
ADDED : ஏப் 24, 2026 05:03 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளிலும் முன்னேற்பாடு பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்ததால், வாக்காளர்கள் உற்சாகமாகவும், காத்திருந்தும் ஓட்டை பதிவு செய்தனர்.
இதுபற்றி தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: ஒட்டு மொத்தமாக, 100 சதவீத ஓட்டுப்பதிவுடன், ஒவ்வொரு பூத்திலும் முழு அளவில் ஓட்டுப்பதிவை ஏற்படுத்த தொடர் முயற்சி நடந்
தது. பூத் சிலிப், 96 சதவீதம் வழங்கி, கட்டாயம் ஓட்டுப்பதிவு செய்ய வலியுறுத்தினோம். அனைத்து ஓட்டுச்சாவடியிலும் சாமியானா பந்தலுடன், நிழல் தரும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அனைத்து ஓட்டுச்சாவடியிலும் சக்கர நாற்காலி, ஒரு வாலண்டியர் நிறுத்தப்பட்டு முதியவர், மாற்றுத்திறனாளிகள், காயம் அடைந்தவர்கள், நடக்க முடியாதவர்களை ஓட்டுச்சாவடி வரை அழைத்து செல்லும் ஏற்பாடு செய்யப்பட்டது.இதுபோல் கர்ப்பிணி, குழந்தைகளுடன் வந்தவர்கள், வேறு உடல் உபாதைகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஓட்டுப்பதிவு செய்ய வைத்தோம்.
தொழிலாளர் துறை மூலம் அனைத்து வகை கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடுக்கப்பட்டு, ஓட்டுப்பதிவுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கல்லுாரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டதால், மாணவ, மாணவியரும் ஆர்வமாக வந்திருந்தனர்.
அதிக எண்ணிக்கையாக, 8க்கு மேல் ஓட்டுச்சாவடிகள் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் கலர் கோடிங் முறையில் நீலம், பச்சை, மஞ்சள், ரோஸ் என நிறங்களை கொண்ட வர்ணம் பூசி, பூத் சிலிப்பில் அதே நிற ஸ்டிக்கர் ஒட்டி, பூத்தை கண்டறிவதில் உள்ள சிரமம் குறைக்கப்பட்டது. இதுவும், விரைவான, முழுமையான, அதிகமான ஓட்டுப்பதிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறு கூறினர்.
