தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மகளிர் குழு 'மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனம்'

மகளிர் குழு 'மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனம்'

மகளிர் குழு 'மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனம்'


ADDED : பிப் 09, 2024 12:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 12:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் துவக்கி வைத்தல், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பதற்கான விழா ஈரோட்டில் நேற்று நடந்தது.

ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை முதன்மை செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.

மகளிர் குழுவினருக்கு 'மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனம்' திட்டத்தை துவக்கி வைத்து, 12,284 பயனாளிகளுக்கு, 171 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவி வழங்கி, 129.92 கோடியில் முடிவுற்ற, 46 பணிகளை திறந்து வைத்து, 6.14 கோடி ரூபாயில், 32 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசியதாவது:

தமிழகம் முழுவதும் இன்று (நேற்று) வாழ்வு இல்லம், நகர்புற வாழ்விட திட்டங்கள் போன்றவற்றில், 2,504 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன்படி இங்கு, 100.34 கோடி ரூபாயில், 2,330 மகளிர் குழுவுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. பிற நலத்திட்ட உதவியும், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடந்துள்ளது.

ஈரோடு புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்க கோரினர். முதல்வரிடம் பேசி ஒப்புதல் பெற்றுத்தரப்படும். முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தமிழகத்தில் மகளிர் குழு துவங்கப்பட்டது. இந்த ஆட்சியில், 12 லட்சத்து, 25,803 குழுக்களுக்கு, 69,554 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு, 2023-24ல், 30,000 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயித்து, 26,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதி தொகை விரைவில் வழங்கப்படும். மகளிர் முன்னேற்றம் மூலம், தமிழகம் முன்னேறி உள்ளது.

கடந்த, 2016 முதல் மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து வரி வருவாயாக, 6 லட்சம் கோடி ரூபாய் சென்றுள்ளது. ஆனால், 2.50 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே திரும்ப தந்துள்ளனர். ஒரு ரூபாயில், 29 காசு மட்டுமே தமிழகத்துக்கு திரும்ப கிடைக்கிறது. கூடுதல் வருவாய் கிடைக்கும்போது, கூடுதலான திட்டங்களை செயல்படுத்தலாம்.

பெண்களை முன்னேற்றமடைய செய்வதே தி.மு.க., அரசின் முதல் நோக்கமாகும். இதற்கேற்ப மகளிர் உரிமை

திட்டத்தில், 1.16 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அரசு பஸ்களில் இலவசமாக பெண்கள் பயணிப்பதால் மாதம், 900 ரூபாய் வரை சேமிப்பாகிறது.

மகளிர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த, மாநில அளவில், 3.20 கோடி ரூபாய் மதிப்பில் 'மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனம்' வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அவர்களது உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்தவும், எடுத்து செல்லவும் இவ்வாகனம் பயன்படுத்தப்படும். முதல்வரால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் கடைகோடி கிராமத்துக்கும், மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் மகளிர் குழுவினரே துாதுவர்களாக உள்ளனர். எனவே, அவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை அரசு முன்னெடுத்து செயல்படுத்தும். இவ்வாறு உதயநிதி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us