ADDED : ஏப் 28, 2026 05:27 AM
பொங்கலூர், வெப்பத்தைத் தாங்கி வளரும் என்பதற்காக அதிக விளைச்சல் தரும் 'உயர் ரக' வெங்காய விதைகளை நம்பிப் பயிரிட்ட விவசாயிகளுக்கு, தற்போது அறுவடை நேரத்தில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
வழக்கமாகச் சின்ன வெங்காயத்தில் நாட்டு ரகம் இரண்டு மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். ஆனால், தனியார் நிறுவனங்களின் உயர் விளைச்சல் ரகங்கள் நாற்று விட்டு அறுவடை செய்ய நான்கு மாதங்கள் எடுக்கும். அதிக மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பலர் இந்த ரகத்தை நடவு செய்திருந்தனர். வாவிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், 'தனியார் நிறுவனம் வினியோகித்த தரமற்ற விதைகளால் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு பயிரிலிருந்து இரண்டு அல்லது மூன்று வெங்காயங்கள் உருவானால் மட்டுமே அவை நல்ல அளவில் வளரும். ஆனால், இந்தத் தரமற்ற விதைகளால் ஒரு பயிரில் ஏழெட்டு வெங்காயங்கள் உருவாகி, அவை அளவில் மிகவும் சிறுத்துப் போய்விட்டன. இதனால் சந்தையில் இவற்றுக்கு உரிய விலை கிடைக்காது,' எனத் தெரிவித்தார்.
கடும் வெப்பத்திலும் பாடுபட்டு விளைவித்த பயிர், விதைக் கோளாறால் வீணாகிப் போனது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு பெற்றுத் தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
