/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யும் பணி
ADDED : மே 22, 2024 12:17 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காந்திரோட்டில் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் இடிக்கப்பட உள்ள நிலையில், அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து காந்திரோடு வழியாக தென்கீரனுார் ஏரிக்கு தண்ணீர் செல்லும் வகையில் உள்ள பாசன வாய்க்காலினை சிலர் ஆக்கிரமித்து 30 மேற்பட்ட கடைகளை கட்டியுள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, ஆக்கிரமிப்பினை அகற்ற தடைவிதிக்கக் கோரி சரோஜினி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனையடுத்து, பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து சரோஜினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து, 8 வாரத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 17ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு நீர்வளத்துறை சார்பில் கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
வரும் 28ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி, ஆக்கிரமிப்பினை அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது. அதில், ஆக்கிரமிப்பு கட்டடத்தை அளவீடு செய்து, இடித்து அகற்றப்பட வேண்டிய பகுதி குறியிடப்பட்டது. தாசில்தார் பிரபாகரன், சர்வேயர் கிருஷ்ணன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் விஜயகுமார் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

