/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வி.சி., நிர்வாகியை எரித்து கொல்ல முயற்சி
/
வி.சி., நிர்வாகியை எரித்து கொல்ல முயற்சி
ADDED : ஜூலை 02, 2024 04:52 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே வி.சி., நிர்வாகியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்துார்பேட்டை அடுத்த எறையூரை சேர்ந்தவர் சின்னதம்பி,45; இவர் தனது மனைவியுடன் தகராறு செய்தார். அதை அதேபகுதியை சேர்ந்த வி.சி., கட்சியின் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட அமைப்பாளரான சூசைநாதன்,49; கண்டித்தார். அப்போது, சின்னதம்பியை, சூசைநாதன் தாக்கினார்.
அதில் ஆத்திரமடைந்த சின்னதம்பி, நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு முன் படுத்திருந்த சூசைநாதன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிச் சென்றார்.
தீயில் கருகிய சூசைநாதனை அப்பகுதி மக்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து சின்னதம்பியை கைது செய்தனர்.