ADDED : ஜூன் 02, 2026 09:42 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு கணினி பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பு; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு ‘கம்பியூட்டர் எய்டட் டிசைன்’, ‘கம்பியூட்டர் எய்டட் மேனுபேக்சரிங்’, ‘கோர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன்’ உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவராகவும், பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது மின் மற்றும் மின்னணுவியல் இன்ஜினியரிங் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும்.
பெரம்பலுார் மற்றும் சேலம் மாவட்டத்தில் 90 நாட்கள் பயிற்சி வகுப்பு நடக்கும். பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவை தாட்கோ ஏற்கும். இதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு வேலை வாய்ப்பும், ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
தகுதிவாய்ந்த நபர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விபரங்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
