ADDED : மே 12, 2026 04:51 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாயமான டெய்லர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி நகர பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சசிக்குமார், 32; டெய்லர். இவருக்கு மஞ்சள் காமாலை உட்பட பல உடல்நல பிரச்னைகள் இருந்தது. கடந்த 10ம் தேதி வீட்டலிருந்து புறப்பட்டு சென்ற சசிக்குமார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் மாயமான சசிக்குமாரை கண்டுபிடித்து தரக்கோரி, இவரது மனைவி தமிழ்செல்வி கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் கோமுகி ஆற்றுப்பாலத்திற்கு அருகே இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டபோது, இறந்து கிடந்தவர் சசிக்குமார் என தெரிந்தது. தொடர்ந்து, போலீசார் சசிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சசிக்குமார் எப்படி இறந்தார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
