ADDED : ஜூன் 25, 2026 08:41 PM
பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய... குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்திட வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பலர் பங்கேற்று மனுக்கள் மற்றும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அதில், விவசாயிகளுக்கு உரம் மற்றும் யூரியா தட்டுபாடியின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் ஜவ்வரிசி தொழிற்சாலை அமைத்திட வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்களை அனைத்து ஏரிகள், குளங்களில் இருந்து அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஏரியில் உள்ள கரைகளில் பனைமரக்கன்றுகள் நடவு செய்திட வேண்டும்.
தரணி சர்க்கரை ஆலையில் கரும்பு நிலுவை தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுவை நெல் அறுவடைக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட வேண்டும். மாடூர் கிராமத்தில் கால்நடை மரத்துவமனை அமைத்திட வேண்டும். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும்.
அதேபோல் கிராமங்களில் மக்காசோளம் போன்ற தானியங்களை உலர்த்திட தேவையான இடங்களில் உலர்களம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நயினார்பாளையம் கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைத்திட வேண்டும். தண்டலை முதல் பாளையம் வரையிலான வயல்வழி சாலை அமைக்க வேண்டும். மாவட்டத்தில் ஏரி, குளங்கள் துார்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் தாழ்வாக உள்ள மின்மாற்றி மின் கம்பிகளை சரி செய்திட வேண்டும்.
மேலும், சேஷசமுத்திரம் கிராமத்தில் வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லகச்சேரி கிராமத்தில் மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பல்லகச்சேரி கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை வேண்டும் . பொய்குணம் முதல் அரசம்பட்ட வரை உள்ள சாலையை பிரதான சாலையுடன் இணைத்திட வேண்டும்.
மாவட்டத்தில் அனைத்து நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக எடுத்துரைத்தனர். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு தீர்வு காணும் பொருட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக விவசாய பயனாளிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்ப இடுபொருட்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலர் லதா, வேளாண்மை இணை இயக்குனர் பேபிகலா, துணை இயக்குனர் ஜோதிபாசு உட்பட அனைத்துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
