மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பயிற்சியாளர்களுக்கு பயிற்சி
மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பயிற்சியாளர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூன் 19, 2026 06:13 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு களப் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் கணக்கெடுப்பு முதற்கட்ட பணியான வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு வரும் ஆக., 1ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடக்கிறது.
இதற்கு முன்பாக ஜூலை 17ம் தேதி முதல் 31ம் தேதி வரையில் நடக்கும் மக்கள் தொகை சுய கணக்கெடுப்பில், பொதுமக்கள் தாங்களாகவே தங்களின் வீடுகள் பற்றிய விவரங்களை se.census.gov.in என்ற இணைய முகவரியில் மொபைல் எண்ணை கொண்டு பதிவு செய்யலாம்.
பதிவு செய்து 34 கேள்விக்கு விடையளித்த பின் 12 இலக்க எண் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வாயிலாக பெறப்படும். தங்கள் பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கணக்கீட்டாளர் கணக்கெடுப்பிற்கு வரும் போது, அந்த 12 இலக்க எண்களை கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பயிற்றுனர்களுக்கு செயல்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சி நேற்று நடந்தது. பயிற்சி வகுப்பிற்கு கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். அதில் ஒவ்வொரு வீட்டிலும் 34 கேள்விகளுக்கு எவ்வாறு பதில் பெற்று கணக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் துல்லியமான விவரங்களை சேகரிக்கவும், பணியின் முக்கியத்துவம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்களின் உருவாக்கத்திற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததை என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனலட்சுமி, சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி, புள்ளியியல் துறை உதவி இயக்குனர் எழிலரசி உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
