/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒரே பதிவு எண்ணில் 4 ஆம்னி பஸ் போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சி
/
ஒரே பதிவு எண்ணில் 4 ஆம்னி பஸ் போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சி
ஒரே பதிவு எண்ணில் 4 ஆம்னி பஸ் போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சி
ஒரே பதிவு எண்ணில் 4 ஆம்னி பஸ் போக்குவரத்து அதிகாரிகள் அதிர்ச்சி
ADDED : செப் 24, 2024 08:09 PM

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ஒரே பதிவு எண்ணில், நான்கு ஆம்னி சொகுசு பஸ்கள் இயக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் பல ஆம்னி சொகுசு பஸ்கள் வரி செலுத்தாமலும், ஒரே பதிவு எண்ணிலும் இயக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, வட்டார போக்குவரத்து துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து துறை, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார், நேற்று முன் தினம் காலை 11:00 மணிக்கு உளுந்துார்பேட்டை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனை நடத்தினார்.
அப்போது, மதுரையில் இருந்து சென்னை சென்ற, 'பி.ஒய்.05 ஜெ 3485' பதிவெண் மற்றும் வரதன் என்ற பெயர் கொண்ட ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில், சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டது தெரிந்தது.
டோல்கேட் பூத்தில் ஆய்வு செய்தபோது, இதே பதிவு எண்ணில் நான்கு ஆம்னி சொகுசு பஸ்கள் உளுந்துார்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து சென்றிருப்பது 'பாஸ்டேக்' மூலம் தெரிந்தது.
அதைத் தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர், ஆம்னி பஸ்சில் வந்த பயணியரை இறக்கி, மாற்று பஸ்சில் அனுப்பி வைத்த பின், பஸ்சை பறிமுதல் செய்தார்.
இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் கூறுகையில், ''ஒரே பதிவெண்ணில் இயக்கிய நான்கு தனியார் சொகுசு பஸ் உரிமையாளர் புதுச்சேரியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தப்படும். அவர் மீது ஒரே பதிவெண்ணில் நான்கு பஸ்களை இயக்கி, அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியது மற்றும் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க உள்ளோம்,'' என்றார்.