/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தலைவலிக்கு சிகிச்சை பெற்றவர் சாவு சின்னசேலத்தில் உறவினர்கள் மறியல்
/
தலைவலிக்கு சிகிச்சை பெற்றவர் சாவு சின்னசேலத்தில் உறவினர்கள் மறியல்
தலைவலிக்கு சிகிச்சை பெற்றவர் சாவு சின்னசேலத்தில் உறவினர்கள் மறியல்
தலைவலிக்கு சிகிச்சை பெற்றவர் சாவு சின்னசேலத்தில் உறவினர்கள் மறியல்
ADDED : ஜன 19, 2024 11:02 PM
கள்ளக்குறிச்சி, -சின்னசேலத்தில் தலைவலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் இறந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன் மகன் பாலுசாமி, 43; திருப்பூரில் தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர், பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று முன்தினம் பாலுசாமிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார்.
தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தான் பாலுசாமி இறந்தார் என அவரது மனைவி பாரதி, சின்னசேலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இந்நிலையில், பாலுசாமி இறப்புக்கு காரணமான தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று மதியம் 12:50 மணியளவில் தனியார் மருத்துவமனை முன், சேலம் - கள்ளக்குறிச்சி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற டி.எஸ்.பி., ரமேஷ் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, 1:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் 40 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.