/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பம் வரவேற்பு
/
முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பம் வரவேற்பு
ADDED : நவ 09, 2024 03:19 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மண்டல இணைப்பதிவாளர் அலுவலக செய்திக்குறிப்பு:
குறைந்த விலையில் பொதுமக்களுக்கு மருந்து கிடைக்கச் செய்யும் வகையில் முதல் கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன்படி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம்., டி.பார்ம்., சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள், www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மருந்தகம் அமைக்க 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்து வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு ரசீது இதில் ஏதேனும் ஒன்றும், வாடகை இடம் எனில் இடத்திற்கான உரிமையாளரின் ஒப்பந்தப் பத்திரம் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.
மருந்தகம் அமைப்பவர்களுக்கு அரசு மானியம் 3 லட்சம் ரூபாய் 2 தவணைகளாக, ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும். டேப்செட்கோ, தாட்கோ மற்றும் டாம்கோ பயனாளிகளும் விண்ணப்பிக்கலாம். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானிய தொகை 1.50 லட்சம் ரூபாய் விடுவிக்கப்படும்.
மருந்தகத்திற்கான ரேக்குகள், குளிர்சாதன பெட்டி, 'ஏசி' மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதிக் கட்ட மானியம் 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.