கள்ளக்குறிச்சி வார சந்தைக்கு பஞ்சு வரத்து... குறைந்தது: பருத்தி பயிரிட ஆர்வமின்மையால் பாதிப்பு
கள்ளக்குறிச்சி வார சந்தைக்கு பஞ்சு வரத்து... குறைந்தது: பருத்தி பயிரிட ஆர்வமின்மையால் பாதிப்பு
UPDATED : மே 10, 2026 10:22 PM
ADDED : மே 10, 2026 10:01 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் பரவலாக பருத்தி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டாததால், வார சந்தைக்கு பருத்தி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்த நவம்பர் முதல், வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி வார சந்தை நடந்து வருகிறது. ஆனால் இவ்வாண்டு பருத்தி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் சந்தைக்கு பருத்தி வரத்து வெகுவாக குறைந்து வர்த்தகம் பாதிப்படைந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி பருத்தி வார சந்தைக்கு அடரி, கைகளத்துார், பொரசக்குறிச்சி, விருகாவூர், ரிஷிவந்தியம், புக்கிரவாரி உள்ளிட்ட விழுப்புரம், கடலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் எல்.ஆர்.ஏ., மற்றும் கொட்டு ரக பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மகுடஞ்சாவடி, தேனி, சத்தியமங்கலம், திருப்பூர், ஆத்துார், கொங்கனாபுரம், புளியம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பஞ்சு மூட்டைகளுக்கு விலை நிர்ணயம் செய்து வர்த்தகம் நடத்துகின்றனர்.
கள்ளக்குறிச்சி பகுதியில் விவசாயிகள் குறைந்த லாபம், அதிகப்படியான பராமரிப்பு பணி கொண்ட பருத்தி பயிரிடுவதை தவிர்த்து வருகின்றனர். அதற்கு ஈடாக அதிக லாபம் தரும் மக்காச்சோளம், மஞ்சள் பயிரிடுவதிலேயே ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர். இதனால் பருத்தி வார சந்தைக்கு பஞ்சு மூட்டைகள் வரத்து குறைந்து வர்த்தகம் மொத்தமாக டல் அடிக்க துவங்கிவிட்டது.
இதனால் கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வார சந்தையில் ஒரு நாளில் மொத்தம் 20 முதல் 25 மூட்டை பருத்தி மட்டுமே வரத்து உள்ளது. அதன்படி கடந்த நவம்பரில் துவங்கி கள்ளக்குறிச்சி பருத்தி சந்தையில் இதுவரை ஒன்றரை டன் பருத்தி மட்டுமே வரத்து ஏற்பட்டு, மொத்தமாக ரூ.2 லட்சத்திற்கு மட்டுமே வர்த்தகம் நடந்துள்ளது.
இவ்வாண்டு பருத்தி சீசன் இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்பதால், பருத்தி வரத்து குறைந்துபோய், அதற்கான வர்த்தகர்களின் வரவும் குறைந்து பாதிப்படைந்து வருகிறது. ஆனால் கடந்தாண்டுகளில், நவ., முதல் ஜூலை வரையிலான பருத்தி சீசன் காலத்தில் கள்ளக்குறிச்சி வார சந்தையில் விவசாயிகள் கொண்டு வந்த ஒரு லட்சம் எல்.ஆர்.ஏ., மற்றும் கொட்டு ரக மூட்டைகள் 21 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சியில் வியாழன் தோறும் நடக்கும் மஞ்சள் வார சந்தைக்கு மஞ்சள் பயிர்கள் வரத்து அதிகரித்து அதன் வர்த்தகம் தற்போது சூடு பிடிக்க துவங்கி உள்ளது.
