ADDED : மே 21, 2026 08:35 AM

கள்ளக்குறிச்சி: வேளாண்மைத்துறை அட்மா திட்டம் மூலம் நாகலுார் கிராமத்தில் அசோலா வளர்ப்பு தொழில்நுட்பங்கள் தலைப்பில் பயிற்சி கூட்டம் நடந்தது.
தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநர் புஷ்பராணி தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூரியா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காளசமுத்திரம் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் மகேஸ்வரன் பங்கேற்று, அசோலா வளர்ப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தார்.
துணை வேளாண் அலுவலர் ராஜா பயிற்சுழற்சி மற்றும் பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், உதவி வேளாண்மை அலுவலர் செல்வராஜ் திரவ உயிர் உரங்கள், நானோ யூரியா மற்றும் நுண்ணோட்ட உரங்கள் பயன்பாடு குறித்தும் பேசினர்.
அட்மா திட்ட செயல்பாடுகள், கோடை உழவின் நன்மைகள், சமச்சீர் உரத்தின் பயன்பாடு, விவசாயி அடையாள எண் பதிவு செய்வதன் அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட பணியாளர்கள் ரவி, கலைவாணன் மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் தமிழ்மெல்வன் செய்திருந்தனர். உதவி வேளாண்மை அலுவலர் சந்திரமோகன் நன்றி கூறினார்.
