/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் சந்தன மரங்கள் வளர்க்கப்படுமா?: வனத்துறையினர் நடவடிக்கை தேவை
/
கல்வராயன்மலையில் சந்தன மரங்கள் வளர்க்கப்படுமா?: வனத்துறையினர் நடவடிக்கை தேவை
கல்வராயன்மலையில் சந்தன மரங்கள் வளர்க்கப்படுமா?: வனத்துறையினர் நடவடிக்கை தேவை
கல்வராயன்மலையில் சந்தன மரங்கள் வளர்க்கப்படுமா?: வனத்துறையினர் நடவடிக்கை தேவை
ADDED : அக் 01, 2024 07:06 AM
சந்தன மரங்கள் மருத்துவ பயன்பாட்டிற்கு மட்டுமின்றி அழகு சாதன பொருட்கள், வாசனை திரவியங்கள், சோப்பு உள்ளிட்ட சரும நோய் தீர்க்கும் கிரீம்கள், கலை நயமிக்க மர சிற்பங்கள் தயாரிக்க அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இன்றைய மார்க்கெட் மதிப்பில் ஒரு டன் சந்தன மரம் ஒரு கோடி ரூபாய் வரை விலை போகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக அமைந்துள்ள கல்வராயன் மலைத்தொடரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வரை சந்தன மரங்கள் அடர்ந்து வளர்ந்து அரசுக்கு மிகப்பெரிய வருவாயை ஈட்டிக் கொடுத்தது.
கள்ளக்குறிச்சி - சேலம் மாவட்டத்தை இணைக்கும் சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன்மலை, மண்ணுார்மலை, வெள்ளிமலை, இன்னாடு, நெய்ய மலை, சந்துமலை, பெலாப்பாடி மலை, அருநுாற்றுமலை, கோதுமலை, கருங்கரடு, சன்னியாசி வரதன் மலை, வேப்பிலை பட்டி, முடியனுார் மலைக்குன்று, வெள்ளாளக்குண்டம் மலை, பழனியாபுரம், கொட்டிப்பள்ளம் பகுதியில் விலைமதிப்பு மிக்க சந்தன மரங்கள் இயற்கையாக வளர்ந்திருந்தன.
இதனை சந்தன மரக் கடத்தல் கும்பல்கள் வெட்டிக் கடத்தி பெரும் லாபம் சம்பாதித்ததன் விளைவாக இன்று அரிதான மரங்களில் ஒன்றாக சந்தன மரம் அழிந்து போனது.
தமிழகத்தில் சந்தன மரம் விளைவதற்கு ஏற்ற சூழல் இங்கு நிலவுவதால் அழிந்து போன சந்தன மரங்களை மீண்டும் இங்கு வளர்க்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனப்பகுதி மட்டுமின்றி தனியார் நிலங்களிலும் சந்தன மரங்களை வளர்க்க விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். தனியார் நிலங்களில் சந்தன மரங்களை வளர்ப்பதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகளை வனத்துறையினர் வழங்க வேண்டும்.
இதன் மூலம் அழிந்து போன சந்தன மரங்கள் கல்வராயன் மலைத் தொடரில் மீண்டும் வளர்ந்து வாசம் வீசத் தொடங்கும். மேலும், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் அரசுக்கு பெருத்த வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
இம்மரங்களை வளர்ப்பதன் மூலம் இயற்கை வளம் அதிகரித்து சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும்.
அதேபோல் இங்குள்ள விவசாயிகளுக்கு சந்தன மரங்களை வளர்ப்பதன் மூலம் வருவாய் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.
இதன் மூலம் மலைவாழ் இளைஞர்கள் தவறான பாதையில் செல்வது தடுக்கப்பட்டு கள்ளச்சாராய உற்பத்தியை முற்றிலும் ஒழிக்க முடியும்.
கல்வராயன்மலையில் சந்தன மரக் காடுகளை மீண்டும் உருவாக்க வனத்துறையினர் விரிவான திட்டத்தை உருவாக்கி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.