/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள்... மந்தம்; கள்ளக்குறிச்சி வரை பாதையை நீட்டிக்க கோரிக்கை
/
சின்னசேலம் ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள்... மந்தம்; கள்ளக்குறிச்சி வரை பாதையை நீட்டிக்க கோரிக்கை
சின்னசேலம் ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள்... மந்தம்; கள்ளக்குறிச்சி வரை பாதையை நீட்டிக்க கோரிக்கை
சின்னசேலம் ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள்... மந்தம்; கள்ளக்குறிச்சி வரை பாதையை நீட்டிக்க கோரிக்கை
ADDED : ஆக 14, 2025 12:24 AM

கள்ளக்குறிச்சியின் பிரதான ரயில் நிலையம் சின்னசேலத்தில் இயங்கி வருகிறது. இங்கிருந்து 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்னை, சேலம், நாகப்பட்டினம், பெங்களூரு, காரைக்கால் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். இவ்வழியாக தினசரி 16 பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன. மூன்று நடைமேடைகள் உள்ளன. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில உணவு கிடங்குகளில் இருந்து 30 ஆயிரம் டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் சின்னசேலத்திற்கு கொண்டு வரப்பட்டு, தமிழக உணவு கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் மாதந்தோறும் யூரியா மூட்டைகளை ஏற்றி வரும் ஒரு ரயிலும் வந்து செல்கின்றன.
தென்னக ரயில்வே சேலம் கோட்டத்தின் கீழ் இயங்கி வரும் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.11.85 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் கடந்த 2024ம் ஆண்டு துவங்கி நடந்து வருகிறது. இதில், ரயில் நிலைய முகப்பு தோற்றம், பூங்கா அமைத்தல், நடைபாதை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை, பயணிகள் தங்கும் அறை, நடைமேடையில் தகவல் பலகை அமைப்பு, லிப்ட், நடைமேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொண்டு நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.
பணிகள் துவங்கி ஓராண்டு முடிந்தும் மேம்பாட்டு பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. ரயில் எண், கோச் பொஷிசன் டிஸ்பிளே இதுவரை அமைக்காததால் பயணிகள் சரியான ரயில் பெட்டி பொஷிசன் தெரியாமல் அங்கும் இங்குமாக ஓடும் நிலை உள்ளது.
ரயில் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் பணியில் இல்லாததால், பயணிகள் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது. கழிவறைகள் நாள் முழுதும் பூட்டியே கிடப்பதால், பயணிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். ரயில் நிலைய 2 பிளாட்பாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கேண்டீன்களும் செயல்படாமல் மூடி கிடக்கிறது.
ரயில் நிலையத்தில் நிலவும் பயணிகள் பிரச்னைகளை சரிசெய்து, அம்ரீத் திட்ட பணிகளை விரைவுப்படுத்தி வேண்டும். சின்னசேலத்தில் இருந்து பொற்படாக்குறிச்சி வரை ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கள்ளக்குறிச்சி வரை 4 கி.மீ., துாரம் ரயில் பாதை அமைக்கப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கள்ளக்குறிச்சி - சின்னசேலம் ரயில் பாதை பணிகளை விரைவுப்படுத்த மாவட்ட நிர்வாகம் ரயில்வே துறைக்கு அழுத்தம் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.