ADDED : ஏப் 26, 2025 06:23 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு கடன் மற்றும் வசூல் செய்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர்கள் சுகந்தலதா, குறிஞ்சி மணவாளன், சுரேஷ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடந்த, 2024-25,ம் நிதியாண்டில் அனைத்து கடன் சங்கத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு குறித்தும், தணிக்கை பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு சேர வேண்டிய பணபலன்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைய மேற்கொள்ள வேண்டிய பணிகள், மாதந்தோறும் இலக்கினை அடைதல், தகுதிவாய்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள், டாம்கோ, கல்வி, பயிர், மற்றுத்திறனாளி, சிறு, குறு வியாபாரிகளுக்கு கடன் வழங்குதல், வரவு, செலவு கணக்குகளை கணினியில் பதிவேற்றம் செய்தல் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
இதில், கூட்டுறவு சங்க செயலாளர்கள், செயலாட்சியர்கள், கள அலுவலர், சரக மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.