/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் செம்மை முறையில் கரும்பு சாகுபடி: பண்ணைகளில் நாற்று உற்பத்தி பணி தீவிரம்
/
கள்ளக்குறிச்சியில் செம்மை முறையில் கரும்பு சாகுபடி: பண்ணைகளில் நாற்று உற்பத்தி பணி தீவிரம்
கள்ளக்குறிச்சியில் செம்மை முறையில் கரும்பு சாகுபடி: பண்ணைகளில் நாற்று உற்பத்தி பணி தீவிரம்
கள்ளக்குறிச்சியில் செம்மை முறையில் கரும்பு சாகுபடி: பண்ணைகளில் நாற்று உற்பத்தி பணி தீவிரம்
ADDED : மார் 01, 2024 12:28 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் செம்மை சாகுபடி முறையிலானகரும்புக்கு, பண்ணைகளில் நாற்று உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயபாளையம், மூங்கில்துறைப்பட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், திருக்கோவிலுாரில் தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயத்தில் நவீன யுக்திகள், இயந்திரங்கள் பயன்பாட்டில் விவசாயிகள் முனைப்பு காட்டுகின்றனர்.
தற்போது செம்மை சாகுபடி முறையில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சொட்டு நீர் பாசனம் முறைகளில் பயிரிட்டு வருகின்றனர். சாதாரண நடவு முறையை விட செம்மை சாகுபடியில் அதிக மகசூல் மற்றும் நல்ல லாபம் கிடைக்கிறது. மேலும் தண்ணீர் மற்றும் களை எடுத்தல் போன்ற பராமரிப்பு பணிகள் குறைவு, பாதிப்பின்றி பயிர்கள் வளர்வது மற்றும் அரசு மானியம் போன்ற காரணங்களால் சாகுபடியின் பரப்பளவு அதிகரித்து வருகிறது.
சாதாரண முறை நடவுக்கு ஏக்கருக்கு 3, 4 டன் கரும்பு தேவைப்படும் நிலையில், செம்மை சாகுபடி முறையில், நாற்று உற்பத்திக்கு 500 கிலோ கரும்பு மட்டும் போதுமானதாக உள்ளது.
இதற்காக பசுமை நிழல் வலை குடில் கூடாரம் அமைத்து, பருசீவல் செய்யப்பட்ட கரும்பு துண்டினை ட்ரேவில் வைத்து எரு, மணல், இயற்கை உரம் போன்றவற்றை சேர்த்து கூடாரத்தில் வைத்து பராமரித்து கரும்பு நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது.
40 நாட்களுக்குள் நாற்று தயாராகி விடுகிறது. ஒரு ஏக்கருக்கு 5,000 கரும்பு நாற்றுகள் போதுமானதாகும். சாதாரண நடவு முறையில் கரும்பு விளைச்சலில் பழுது, களைகள் மற்றும் கரையான் தாக்குதல் அதிகமாக இருக்கும். ஆனால், செம்மை கரும்பு சாகுபடி முறையில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதில்லை. சாதாரண நடவு முறையில் ஏக்கருக்கு 40 டன் கிடைக்கும். செம்மை சாகுபடி முறையில் 60 முதல் 80 டன் வரை கிடைக்கிறது.
செம்மை சாகுபடி முறையில் கரும்பு பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு முன்னுரிமை மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. இதனால், சிறு, குறு விவசாயிகளும் தற்போது செம்மை சாகுபடி முறையில் பயிர் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஜெ.ஜெ., நகர் மற்றும் நீலமங்கலம், ஏமப்பேர், வினைதீர்த்தாபுரம், தியாகை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கரும்பு நாற்று உற்பத்தி பண்ணைகள் உள்ளன. ஒரு கரும்பு நாற்று 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் பலர் கரும்பு சாகுபடி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி தற்போது பண்ணைகளில் கரும்பு நாற்று உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

