கோமுகி அணை பூங்கா சீரமைக்காததால் மக்கள்... அதிருப்தி! பூமி பூஜை போட்டும் பணி துவங்கவில்லை
கோமுகி அணை பூங்கா சீரமைக்காததால் மக்கள்... அதிருப்தி! பூமி பூஜை போட்டும் பணி துவங்கவில்லை
UPDATED : மே 19, 2026 04:51 PM
ADDED : மே 19, 2026 04:41 PM

கச்சிராயபாளையம்: கோமுகி அணையில் 30.60 கோடி ரூபாயில் பூங்காவை சரி செய்ய பூமி பூஜை போடப்பட்ட நிலையில் பணிகள் துவங்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கல்வராயன் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கோமுகி அணை. இதன் கட்டுமானப் பணிகள் 19963ல் காமராஜர் ஆட்சி காலத்தில் துவங்கியது. பின் 1965ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி அன்றைய முதல்வர் பக்தவச்சலம் அணையை திறந்து வைத்தார். 900 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணை 46 அடி உயரம் கொண்டது. இதன் மூலம் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 11 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கோமுகி அணை அமைக்கப்பட்ட போது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், கண்கவர் பூங்கா அமைக்கப்பட்டது.
கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் பொட்டியம், கல்படை, பரங்கிநத்தம், ஆகிய ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீர் முழுவதும் கோமுகி அணையில் வந்து தேங்குகிறது. கல்வராயன் மலையில் உள்ள பெரியார், மேகம், கவியம், சிறுகலுார், எட்டியாறு உட்பட பல்வேறு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. மேலும் கரியாலுாரில் படகுதுறை, சிறுவர் பூங்கா, மூங்கில் குடில்கள் ஆகியவைகளும் உள்ளன.
கல்வராயன்மலையில் ஆகஸ்ட் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து இருக்கும். இதனால் கல்வராயன்மலைக்கு பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
அவர்கள் கோமுகி அணையையே முதலில் பார்வையிடுகின்றனர். பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பராமரிப்பின்றி பூங்கா பாழாகிப் போனது. இதனால் கோமுகி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேமடைந்த சிலைகள் புனரமைக்கப்பட்டதுடன் சீரமைத்து கோமுகி அணை பூங்காவையும் சீரமைக்கப்பட்டது. இதில் பூங்காவில் புதிதாக குரோட்டான்ஸ் செடிகள் மற்றும் பல்வேறு அழகு தாவரங்கள் நடவு செய்யப்பட்டது.
மேலும் ஓய்வு மண்டபம் மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து அதிகாரிகளின் அலட்சியத்தால், பூங்கா மீண்டும் பராமரிப்பின்றி சேதமடைந்ததுடன், புதர்கள் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.
இந்நிலையில் கோமுகி அணை பூங்காவை 30 கோடியே 60 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புனரமைக்க திட்டமிடப்பட்டது.
இதில் 828 மீட்டர் சுற்றளவில் மதில் சுவர் அமைத்தல், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிவறை வசதிகள், நடபைாதை அமைத்தல், காட்சிக் கூடம், சிறப்பு வடிவமைப்பு கொண்ட இருக்கைகள், அழகு தாவரங்கள், பார்வை கோபுரங்கள், குடிநீர் வசதி, டிக்கட் கவுண்டர் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த மார்ச் 7ம் தேதி மாதம் பூமி பூஜை போடப்பட்டது.
பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு அங்கிருந்த முட்புதர்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பூங்கா விரைவில் அமைக்கப்படும் என ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் பணிகள் நடைபெறாமல் உள்ளதால் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் பூங்கா அமைக்கும் பணிகளை துரிதபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
