/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரிஷிவந்தியம் தொகுதிக்கு குறி வைக்கும் தே.மு.தி.க.,
/
ரிஷிவந்தியம் தொகுதிக்கு குறி வைக்கும் தே.மு.தி.க.,
ரிஷிவந்தியம் தொகுதிக்கு குறி வைக்கும் தே.மு.தி.க.,
ரிஷிவந்தியம் தொகுதிக்கு குறி வைக்கும் தே.மு.தி.க.,
ADDED : பிப் 10, 2026 05:05 AM
தே ர்தல் வரலாற்றில் ரிஷிவந்தியம் தொகுதியை தி.மு.க., - அ.தி.மு.க., பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே விட்டுக் கொடுக்கும். இதன் காரணமாக மாற்றி மாற்றி கூட்டணி அமைத்த காங்., மறைந்த எம்.எல்.ஏ., சிவராஜிக்கு ஒதுக்கியதால் அவர் தனக்கென்ற தனிப்பட்ட செல்வாக்கை தொகுதியில் வளர்த்து வைத்திருந்தார்.
கடந்த 2011ம் ஆண்டு அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இத்தொகுதியில் போட்டியிட்டு சிவராஜின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இது ரிஷிவந்தியம் தொகுதி தே.மு.தி.க.,வின் பலத்திற்கு சான்றாக இன்றும் பேசப்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டு தி.மு.க., நீண்ட இடைவெளிக்கு பிறகு இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆனார். அடுத்து 2021ல் மீண்டும் இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.
தொகுதியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள அமைச்சர் வேலுவின் துணையுடன் பாலங்கள், சாலைகள் என திட்டங்களை நிறைவேற்றி தொகுதியில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார்.
மேலும், கரும்பு வெட்டும் கூலி தொழிலாளர்களில் துவங்கி, அனைத்து தரப்பினருக்கும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை என அனைத்து விழாக்களையும் தேர்தல் விழாவாக மாற்றி குதுாகலம் அடையச் செய்துள்ளார்.
இதனால் எதிர் அணியில் போட்டி போட தொகுதியில் பலமான வேட்பாளரை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தி.மு.க., வை எதிர்க்கும் பிரதான கட்சிகள்.
விஜயகாந்த் போட்டியிட்ட அந்த காலகட்டத்தில் மட்டுமல்ல, இன்றும் இத்தொகுதியில் தே.மு.தி.க., வுக்கு இருக்கும் செல்வாக்கை யாரும் புறம் தள்ளி விட முடியாது.
இதனை நன்கு உணர்ந்திருக்கும் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதாவும் ரிஷிவந்தியத்தில் களம் கண்டு அரசியலில் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் வலுவான கூட்டணியில் பங்கேற்று போட்டியிட முடிவு செய்து, தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைந்தால் அக்கட்சி பிரேமலதாவுக்கு தொகுதியை ஒதுக்குவதில் எந்த சிக்கலும் இருக்காது. அதே நேரத்தில் தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்தால் தே.மு.தி.க.,விற்கு ஒதுக்குமா என்பது சந்தேகம்தான் என அக்கட்சியினரே புலம்புகின்றனர்.
தற்போதைய நிலையில் சவால் விடும் அளவிற்கு துணிந்து நிற்கும் தி.மு.க., விடம் சம பலத்துடன் மோத பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., வில் ஆட்களை தேட வேண்டிய கட்டாயம் தான் நிலவுகிறது. அதே நேரத்தில் கூட்டணி பலத்துடன் துணிந்து எதிர்க்க தே.மு.தி.க., தயாராகி வருகிறது.

