ADDED : மே 14, 2025 11:46 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பாரதி கல்லுாரியில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் கல்லுாரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தொடர்ந்து உயர்கல்வி முக்கியத்துவம், உதவித் தொகை, உயர்கல்விக்கான நலத்திட்டங்கள், இட ஒதுக்கீடு, வங்கி கடன், அயல்நாடுகளில் கல்வி கற்றல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், வேளாண் படிப்புகள், போட்டி தேர்வுகள் உள்ளிட்டவை அடங்கிய அரசின் உயர்கல்வி வழிகாட்டி கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் உயர்கல்விக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பல்வேறு துறைகளின் சார்பில் அரசு திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் உயர்கல்வி வழிகாட்டி கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி, பாரதி கல்லுாரி தாளாளர் கந்தசாமி, ஆக்ஸாலிஸ் பள்ளி தாளாளர் பரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
