/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கொலை முயற்சி வழக்கு விவசாயிக்கு 6 ஆண்டு சிறை
/
கொலை முயற்சி வழக்கு விவசாயிக்கு 6 ஆண்டு சிறை
ADDED : ஜூலை 01, 2025 03:49 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கொலை முயற்சி வழக்கில் ஆசாமிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பழங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 60; விவசாயி. இவரது மகள் ராஜேஸ்வரி, 16; இவர் கடந்த 1997ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி ஆடுகளை ஓடை அருகே மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ஆடுகள் அருகே உள்ள அயன்குஞ்ரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், 64; என்பவது நிலத்தில் நெற் பயிர்களை மேய்ந்தன. இதனால், கண்ணன் ஆத்திரமடைந்து சிவலிங்கத்திடம், தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கண்ணன், சிவலிங்கத்தை தாக்கி கொடுவா கத்தியால் வெட்டினார். தடுக்க வந்த, சிவலிங்கத்தின் மனைவி வீரம்மாள், 59; என்பவரையும் தாக்கினார். இதில் சிவலிங்கம், வீரம்மாள் படுகாயமடைந்தனர்.
இது குறித்து சிவலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் கொலை முயற்சி வழக்காக பதிந்து கண்ணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை உளுந்துார்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிவலிங்கம் தரப்பில் அரசு வழக்கறிஞர் இளமுருகன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகம், கொடுங்காயம் ஏற்படுத்திய கண்ணனுக்கு 6 ஆண்டு சிறையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.