/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி: திருக்கோவிலுார் ஏரிக்கு தண்ணீர் வரத்து தடுத்து நிறுத்தம்
/
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி: திருக்கோவிலுார் ஏரிக்கு தண்ணீர் வரத்து தடுத்து நிறுத்தம்
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி: திருக்கோவிலுார் ஏரிக்கு தண்ணீர் வரத்து தடுத்து நிறுத்தம்
பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி: திருக்கோவிலுார் ஏரிக்கு தண்ணீர் வரத்து தடுத்து நிறுத்தம்
ADDED : மார் 25, 2024 06:04 AM

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள சாத்தனுார்அணையில் இருந்து கடந்த 15ம் தேதி திருக்கோவிலுார் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் உரிமை நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக தென்பெண்ணையில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் சிறிதளவு தண்ணீர் வந்தால்கூட திருக்கோவிலுார் பெரிய ஏரி ஒரு சில நாட்களிலேயே நிரம்பி வழியும். இதற்காக ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் வகையில், சிறப்பான நீர் வழி பாதை உள்ளது.இதனை ஆண்டு தோறும் பொதுப்பணித்துறை சீரமைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏரி வாய்க்கால் துார்வாரப்படவில்லை. இதன் காரணமாக கடந்த பருவமழையின் போது சீராக தண்ணீர் வந்து ஒருவழியாக ஏரி நிரம்பியது. தற்போது ஏரி நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.
இச்சூழலில் சாத்தனுார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில், திருக்கோவிலுார் ஏரிக்கு தண்ணீர் வராத வகையில், பொதுப்பணித் துறையால் ஜே.சி.பி., மூலம் கால்வாய் மூடி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஆற்றில் சிறிதளவு தண்ணீர் வந்தால் கூட ஏரிக்கு வரும் வகையில் நிரந்தர தடுப்பு அமைக்கப்பட்டு, தண்ணீர் சென்று கொண்டிருக்கும். வேண்டுமென்றே பொதுப்பணித் துறையினர் ஏரிக்கு தண்ணீர் வராத வகையில் தடுப்பை ஏற்படுத்தி இருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மீன் குத்தகைதாரர்கள் ஏரியில் மீன் பிடிப்பதற்கு வசதியாக ஏரிக்கு தண்ணீர் வராமல் பொதுப்பணி துறையினர் தடுத்து வைத்திருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், இது திருக்கோவிலுார் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் உரிமை நீர். திருக்கோவிலுார் ஏரிக்கு திருப்ப முடியாது' என்கின்றனர்.
அப்படியென்றால் குடிநீருக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது எந்த காலத்து வழக்கம் என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்புகின்றனர். எப்போதும் இல்லாத வகையில், புதுக்கதையாக இது போன்ற சாக்கு போக்குகளை கூறும் பொதுப்பணி துறையின் அலட்சியப் போக்கால் இந்த ஆண்டு கோடை காலத்தில் திருக்கோவிலுார் நகரில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, ஏரி வாய்க்காலுக்கு தண்ணீர் வரும் அடைப்பை பொதுப்பணித்துறையினர் போர்க்கால அடிப்படையில் நீக்கி எப்போதும் போல் வழக்கமாக ஏரிக்கு தண்ணீர் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

