/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயிகள் ஆர்ப்பாட்டம் வாபஸ்
/
விவசாயிகள் ஆர்ப்பாட்டம் வாபஸ்
ADDED : டிச 09, 2024 07:28 AM
திருக்கோவிலுா : அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி பெரிய ஏரி கரையை சீரமைக்க கோரி விவசாயிகள் நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் பேச்சுவார்த்தையால் வாபஸ் பெறப்பட்டது.
அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில், 117 எக்டர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. சமீபத்தில் 1.60 கோடி ரூபாய் மதிப்பில் முதல்வர் அறிவிப்பு திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கனமழையால் ஏரிக்கு அதிகப்படியான அளவில் நீர்வரத்து இருந்தது. இதன் காரணமாக புதிதாக கட்டப்பட்ட மதகு பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டு, உடைப்பு ஏற்படும் அபாயம் உருவானது. கிராம மக்கள் ஒன்றிணைந்து மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர்.
ஏரி சீரமைப்பு பணி முறையாக செய்யாததே ஏரி பாதிப்படைய காரணம் எனவும் உடனடியாக சீரமைப்பு பணியை நீர்வளத்துறை மேற்கொள்ள வலியுறுத்தி விவசாயிகள் ஊராட்சி அலுவலகம் முன் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
தகவல் அறிந்த அரகண்டநல்லுார் போலீசார் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கரையை பலப்படுத்தி தருவதாக உறுதியளித்தனர். அதனையேற்று ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.