ADDED : பிப் 06, 2024 05:49 AM
கள்ளக்குறிச்சி, : கடந்த சில நாட்களாக பூண்டு விலை கிடுகிடு வென உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பூண்டை அதிகம் பயன்படுத்தினாலும் இங்கு அதிகம் பயிரிடுவதில்லை.
மலைப்பகுதிகளில் மட்டும் விளையும் பூண்டு தமிழகத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியை ஒட்டி உள்ள வில்பட்டி, பூம்பாறை, கூக்கால், மன்னவனுார், பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் 1600 ஏக்கர் அளவில் விளைவிக்கின்றனர்.
அதிகப்படியான தேவைக்கு மத்தியபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், இமாச்சலபிரதேசம் போன்ற வட மாநிலங்களிலிருந்தும், சீனாவில் இருந்து வரவழைக்கின்றனர். இந்த ஆண்டு வடமாநிலங்களில் பூண்டு விளைச்சல் குறைந்ததால் கடந்த 3 மாதங்களாக பூண்டின் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரை கிலோ 250 முதல் 300 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரம் 400 ரூபாய்க்கு விற்பனையானது.
ஆனால் கடந்த இரண்டே நாளில் திடீரென 500 ரூபாயைத் தொட்டது. சென்னையில் 500 ரூபாய்க்கு விற்பனையான பூண்டு நேற்று நடுத்தர நகரங்களிலும், கிராமங்களில் 550 முதல் 600 ரூபாய் வரை விற்பனையானது.
கடந்த சில நாட்களாக தமிழகத்திற்கு வரும் பூண்டு வரத்து 80 சதவீதம் வரை குறைந்ததால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தக்காளி விலை உயர்ந்த போது தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளியை மானிய விலையில் விற்பனை செய்தது.
அதே போல் ரேஷன் கடைகளில் பூண்டு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு மகளிரிடம் ஏற்பட்டுள்ளது.