/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
க.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே... உயர்மட்ட பாலம்; கிராம மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?
/
க.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே... உயர்மட்ட பாலம்; கிராம மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?
க.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே... உயர்மட்ட பாலம்; கிராம மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?
க.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே... உயர்மட்ட பாலம்; கிராம மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?
ADDED : ஜன 22, 2025 09:32 AM

கள்ளக்குறிச்சி அடுத்த க.மாமனந்தல் ஊராட்சியில் 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி கிராம மக்கள், பல்வேறு வேலையாக நாள்தோறும் கள்ளக்குறிச்சி நகருக்கு வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள் பலரும் வந்து செல்கின்றனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு எதிரே செல்லும் வழியாக க.மாமனந்தல் கிராமம் 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இதனால், கள்ளக்குறிச்சிக்கு வந்து செல்வதற்கு, குறுகிய வழியாக 2 கி.மீ., தொலைவில் கோமுகி ஆற்றை கடந்து ரோடுமாமந்துார் வழியினை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், விவசாயிகள் தங்களது விளைபொருட்கள், செங்கல் போன்ற பல்வேறு பொருட்களை டிராக்டர் டிப்பர், டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் கோமுகி ஆற்றை கடந்து எடுத்து செல்கின்றனர். அதேபோல், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கிராம மக்கள் பலர் அவ்வழியாக நடந்து செல்கின்றனர். கரடு முரடாக உள்ள கோமுகி ஆற்றை கடக்கும் போது கிராம பொதுமக்கள் பலர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பருவ மழைக் காலங்களில் கோமுகி அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது, ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அத்தருணத்தில் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள 5 கி.மீ., தொலைவு சாலை வழியாக சுற்றி செல்கின்றனர். இச்சாலையில் போதிய மின் வெளிச்சமின்றி உள்ளதால், இரவில் அவ்வழியாக கடும் அச்சத்துடனே செல்கின்றனர்.
இதனையொட்டி, கா.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு சட்டசபை, லோக்சபா தேர்தலின் போதும்,வாக்கு சேகரிக்க வருவோரிடம், உயர்மட்ட பாலம் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து மனுவும் அளித்து வருகின்றனர்.
கடந்த மாதம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெய்த பலத்த மழையால், கோமுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து தற்போது ஆற்றில் குறைவாக தண்ணீர் செல்லும்போது, நீண்ட துாரம் சுற்றி செல்ல சிரமப்பட்டு ரோடு மாமந்துார் வழியாக செல்வதிலேயே முனைப்பு காட்டுகின்றனர்.
தற்போது இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் கிராம மக்கள் பலர் ஆற்று தண்ணீரை கடந்து செல்கின்றனர்.
சில நேரங்களில் ஆற்றில் இடுப்பளவு தண்ணீர் செல்லும் போதும், ஆபத்தினை உணராமல் கடும் சிரமங்களுக்கு இடையே சிலர் ஆற்றை கடந்து செல்கின்றனர். அத்தருணத்தில், அங்குள்ள கற்கலில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லும் அபாயமும் உள்ளது.
எனவே, கிராம மக்களின் பல ஆண்டுகோரிக்கையான கா.மாமனந்தல் - ரோடுமாமந்துார் இடையே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.