ADDED : ஏப் 16, 2025 08:51 AM

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரக்கோரி பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கராபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் குணசேகரன், 35; விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி வனிதா,30; இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன், குணசேகரன் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த, 10 நாட்களுக்கு முன், திடீரென வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி வனிதா உடனடியாக சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் தற்போது வரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் போலீசாரை கண்டித்து வனிதா குடும்பத்துடன், கடை வீதி மும்முனை சந்திப்பில், நேற்று முன் தினம் மாலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார், விரைவில் குணசேகரனை கண்டு பிடித்து தருவதாக உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிடப்பட்டது. இதனால், சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

