கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள்... அதிகரிப்பு!குற்றவாளிகளை கைது செய்ய துரித நடவடிக்கை தேவை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருட்டு சம்பவங்கள்... அதிகரிப்பு!குற்றவாளிகளை கைது செய்ய துரித நடவடிக்கை தேவை
UPDATED : மே 24, 2026 07:11 PM
ADDED : மே 24, 2026 07:01 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க போலீசார் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் மனைவி விஜயலட்சுமி, 56; இவர், கடந்த ஏப்., மாதம் 20ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு, சொந்த ஊரான சேலம் மாவட்டம், செக்கடிப்பட்டு கிராமத்திற்கு சென்றார்.
வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நெக்லஸ், செயின் உட்பட 28 சவரன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அதேபோல், சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தை சேர்ந்த தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் கடந்த ஏப்., 25ம் தேதி இரவு வீட்டிற்கு முன் நிறுத்தியிருந்த 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள பார்ட்ச்யூனர் காரினை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் லஷ்மி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி சுஜாதா, 41; கடந்த 12ம் தேதி சுஜாதா தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சேலத்திற்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பகலிலேயே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, 25 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
கடந்த 15ம் தேதி இரவு கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை பணியாளர்கள் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர். மறுநாள் கடையை திறந்தபோது கடையின் மேற்புற தளத்தை துளையிட்டு திருட முயற்சித்தது தெரிந்தது.
சின்னசேலம் அடுத்த பெருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி தையல்நாயகி, 41; இவர், நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன் வரண்டாவில் படுத்து துாங்கினார். மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 23 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும், தையல்நாயகி வீட்டிற்கு அருகே உள்ள பெரியசாமி மனைவி பூச்சி,56; என்பவரது வீட்டின் முன்பக்க கதவையும் உடைத்து, பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடித்து சென்றனர்.
இதுதவிர கள்ளக்குறிச்சி நகர பகுதியில் வீட்டிற்கு முன் நிறுத்தப்படும் விலை உயர்ந்த பைக்குகள் குறிவைத்து திருடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க எஸ்.பி., ஷஹ்னாஸ் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
